Friday, August 30, 2019

வாரி இறைத்தது சந்தனமே !

ஐயா திரு.சிவகுமார் அவர்களே!

தனது சொந்தப் பெண் குழந்தை ஆன போதும், ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பின், தந்தைக்கும் - பெண் குழந்தைக்கும் ஆன உறவில் ஒரு கட்டுப்பாடு காலம் காலமாக நமது சமுதாயத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.  பாசம் காட்டுவதற்கு தடையில்லை என்ற போதும், அந்தப் பெண்ணிடம் பழகுவதற்கான சுதந்திரமானது அவளது தந்தையிடம் கட்டுப்படுத்தப்பட்டு, திருமணத்திற்குப்பின் அவளது கணவனுக்கு எவ்வித கட்டுப்பாடுமில்லாமல்  வழங்கப்படுகிறது.

இது தொன்று தொட்டு வரும் வழக்கம். சமுதாயத்திற்கு எந்த தீங்கும் தராத ஒரு பழக்கம்.

இதனால் , தந்தையானவர் தான் சிறுமைப்படுத்தப்பட்டதாகவோ, தனது உரிமைகள் பறிக்கப்பட்டதாகவோ வருந்துவதில்லை. பெண்மைக்கு அவர் தரும் "மரியாதை" இந்த செயலில் வெளிப்படுகிறது.மகளும் தன் தந்தையின் மீது தனக்குள்ள உரிமை குறைந்ததாக கொள்வதில்லை.

தாங்கள் சமீபத்தில் வெளியிட்ட தஞ்சாவூர் கோவில் பற்றிய கருத்திற்கும் இது பொருந்தும். உருவாக்குபவரிடமிருந்து , உரிமையானது வேறொருவருக்கு உருவாக்கியவரின் விருப்பத்துடன் செல்கிறது. ஸ்தபதியும் அந்த உரிமை கோரவில்லை.ராஜராஜ சோழனும்  அந்த உரிமை கோரவில்லை .ஆகம விதிகளை மாற்றி தனக்காக உரிமை பெற்று கொள்ளவுமில்லை.

இங்கு இரு விஷயங்களை  தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

1."அர்ச்சகர் அனைவரும் அந்தணர் இல்லை". சில ஆலயங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அர்ச்சகராக முடியும்.

2."அந்தணர்கள் அனைவரும் அர்ச்சகர்கள் இல்லை". தம்மை தகுதி படுத்தி கொள்வதால் மட்டுமே ஒருவர் அர்ச்சகர் ஆக முடியும்.

எவ்வளவோ ஆலயங்கள், பாடல் பெற்ற திருத்தலங்கள், கேட்பாரற்று உள்ளன. தங்களின் உள்ளக்கிடக்கை உண்மை எனில், தாங்கள் அவ்வாலயங்களை தொட்டு, தூய்மைப்படுத்தி, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அர்ச்சகர்களை நியமிக்கலாம்.

கம்பராமாயணத்தில் கரை கண்ட உங்களை போன்ற ஆத்திகர்கள், புனித சனாதன தர்மத்தின் மீது இறைத்ததை சேறாக  நான் எண்ணவில்லை. நீங்கள் இறைத்ததை சந்தனமாகவே கொள்கிறேன்.


ஏனெனில்,

"சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி".

அன்பன்

கே.டி.எஸ்.முகுந்தன்