Friday, January 17, 2020

தனித்து திரும்பவில்லை. தன்னுள் அணைத்து திரும்புகிறான்.




ஸ்ரீமான். ஸ்ரீநிவாசன் (பாட்டாளி) : 

காஞ்சி வரதனின் கோயில் மணியமாக சேவை செய்து, அத்திவரதர் வைபவத்தில்,பெரும் பங்கு ஆற்றும் பேறு பெற்றவர்.

கீதை மொழிக்கேற்ப, தனது கைங்கர்யத்தில் மிகுந்த சிரத்தையுடன்,பலன் கருதாது,சிரமங்கள் பலவானபோதும்,உறுதியடன்,பகவத் கைங்கர்யமும்,பாகவத கைங்கர்யமும்,குறை ஒன்றுமில்லாமல்,தனது உடல்நலம் குறைவானபோதும்,நிறைவேற்றியவர்.

இந்த ஆண்டு வரதனின் பழைய சீவரம் பாரி வேட்டைக்கு, கோயில் மணியமாக,தன்  பணிக்குண்டான பொறுப்பினை, வரதன் பழைய சீவரம் செல்லும் வரை நிறைவேற்றியவர்.

நேற்று காலை, வரதனை காண பழைய சீவரம் மலை ஏறி சென்றவுடன்,பகவானின் திருக்கருணை பயனாக,தனது பூத உடலை விடுத்து ,அவன் சன்னதியில்  அவர் ஆன்மா, அவன் திருவடி சேர்ந்தது.

பக்தனை சோதிப்பது பகவானுக்கு அழகோ? மணியத்துடன் மலை ஏறிய தேவாதிராஜன், தனித்து திரும்புவது அழகோ ? என வேதனை கேள்விகள் ஏராளம்... ஏராளம்...

அதற்கு அடியேனின் சிறு விளக்கம்.

தேவாதிராஜன் தனித்து திரும்பவில்லை. தனது மனதிற்கினிய மணியத்தை ,கைங்கர்ய மாணிக்கத்தை  தன்னுள் அணைத்து திரும்புகிறான்.

பெருமானின் புகழை விடவும், அடியாரின் புகழ் பெரிதன்றோ?

கூரம் திருவாழி சுந்தரம் முகுந்த ராமானுஜ தாசன்

Friday, August 30, 2019

வாரி இறைத்தது சந்தனமே !

ஐயா திரு.சிவகுமார் அவர்களே!

தனது சொந்தப் பெண் குழந்தை ஆன போதும், ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பின், தந்தைக்கும் - பெண் குழந்தைக்கும் ஆன உறவில் ஒரு கட்டுப்பாடு காலம் காலமாக நமது சமுதாயத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.  பாசம் காட்டுவதற்கு தடையில்லை என்ற போதும், அந்தப் பெண்ணிடம் பழகுவதற்கான சுதந்திரமானது அவளது தந்தையிடம் கட்டுப்படுத்தப்பட்டு, திருமணத்திற்குப்பின் அவளது கணவனுக்கு எவ்வித கட்டுப்பாடுமில்லாமல்  வழங்கப்படுகிறது.

இது தொன்று தொட்டு வரும் வழக்கம். சமுதாயத்திற்கு எந்த தீங்கும் தராத ஒரு பழக்கம்.

இதனால் , தந்தையானவர் தான் சிறுமைப்படுத்தப்பட்டதாகவோ, தனது உரிமைகள் பறிக்கப்பட்டதாகவோ வருந்துவதில்லை. பெண்மைக்கு அவர் தரும் "மரியாதை" இந்த செயலில் வெளிப்படுகிறது.மகளும் தன் தந்தையின் மீது தனக்குள்ள உரிமை குறைந்ததாக கொள்வதில்லை.

தாங்கள் சமீபத்தில் வெளியிட்ட தஞ்சாவூர் கோவில் பற்றிய கருத்திற்கும் இது பொருந்தும். உருவாக்குபவரிடமிருந்து , உரிமையானது வேறொருவருக்கு உருவாக்கியவரின் விருப்பத்துடன் செல்கிறது. ஸ்தபதியும் அந்த உரிமை கோரவில்லை.ராஜராஜ சோழனும்  அந்த உரிமை கோரவில்லை .ஆகம விதிகளை மாற்றி தனக்காக உரிமை பெற்று கொள்ளவுமில்லை.

இங்கு இரு விஷயங்களை  தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

1."அர்ச்சகர் அனைவரும் அந்தணர் இல்லை". சில ஆலயங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அர்ச்சகராக முடியும்.

2."அந்தணர்கள் அனைவரும் அர்ச்சகர்கள் இல்லை". தம்மை தகுதி படுத்தி கொள்வதால் மட்டுமே ஒருவர் அர்ச்சகர் ஆக முடியும்.

எவ்வளவோ ஆலயங்கள், பாடல் பெற்ற திருத்தலங்கள், கேட்பாரற்று உள்ளன. தங்களின் உள்ளக்கிடக்கை உண்மை எனில், தாங்கள் அவ்வாலயங்களை தொட்டு, தூய்மைப்படுத்தி, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அர்ச்சகர்களை நியமிக்கலாம்.

கம்பராமாயணத்தில் கரை கண்ட உங்களை போன்ற ஆத்திகர்கள், புனித சனாதன தர்மத்தின் மீது இறைத்ததை சேறாக  நான் எண்ணவில்லை. நீங்கள் இறைத்ததை சந்தனமாகவே கொள்கிறேன்.


ஏனெனில்,

"சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி".

அன்பன்

கே.டி.எஸ்.முகுந்தன்






Saturday, November 29, 2014

இனியாவது தப்பிக்குமா எங்கள் மடங்கள் ?



திராவிடர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகங்களின் உணவுகளுக்கு அவ்வபோது ஊறுகாயாக பயன்படுவது " சங்கர மடம்  ஆகும் ". தங்களின் உட்கட்சியில் எப்போதெல்லாம் குழப்பம் ஏற்படுகின்றதோ , அப்போதெல்லாம் தங்களின் பலவீனத்தை மறைக்க சங்கர மடத்தை வம்புக்கிழுப்பது வாடிக்கையாகும்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் " வாரிசுகளை நியமிக்க எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடம் அல்ல " என்னும் பொன்மொழி அடிக்கடி இடம் பெரும். சங்கர மடத்திலோ , வேறு எந்த ஹிந்து மடங்களிலோ , தமது சொந்த வாரிசை அடுத்த பீடாதிபதியாய்  நியமிக்கும் வழக்கம் இல்லை.  இருப்பினும் அவற்றை மேற்கோள் காட்டி தமது பகுத்தறிவை அடிக்கடி பறை சாற்றி கொள்வது கழகங்களின் வாடிக்கை.

சமீபத்தில் டெல்லி இமாம் , தமது மகனை அடுத்த வாரிசாக நியமித்து உள்ளார். இது எந்த கழகத்தின் கண்களையும் உறுத்தவில்லை. கேள்வி கேட்கப்படாவிட்டாலும் , கேள்வியும், பதிலும் தாமே எழுதும் கலைஞரும், ஹிந்து மதத்தின் சிறு அசைவுகளுக்கும் , வேப்பேரியில் மேடை போட்டு வீர வசனம் பேசும் வீரமணியாரும், மெய் சுருக்கி, வாய் மூடி , மௌன சாமியார்களாக மாறி விட்டனர்.

" சிறுபான்மை ஆதரவு " என்பது " பெரும்பான்மையினரை சிறுமைப்படுத்துவதே" என்ற உ(ள )யரிய நோக்கத்துடன் , சிறுபான்மையினரை விமர்சித்தல் மதச்சார்பின்மைக்கு விரோதம் என்ற விந்தை தத்துவமும் சேர்ந்து , கழக பேனாக்களையும், பிரசார பீரங்கிகளையும் கட்டி போட்டிருக்கிறது.

இனியாவது இவர்கள் எமது சங்கர மடங்களை மன்னித்து மேற்கோள் காட்டாமல் ,கருணை காட்டுவார்களா ?

அன்பன்

K.T.S.Mugundan

Saturday, October 11, 2014

உண்மையான கர்ம வீரர்கள்

சமீபத்தில் நடை பெற்ற தமிழக புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி , சிந்தனையை  சில வருடங்கள் பின்னோக்கி செலுத்துகிறது.

1984 - ல் திருமதி. இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்தவுடன், ஒரு அசாதாரண சூழ்நிலையில் திரு. ராஜீவ் காந்தி தலைமையில் புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்றது.

சொந்த அன்னையின் இறப்பின் போதும் , மன உறுதியுடன் திரு.ராஜீவ் கலக்கத்தை வெளிப்படுத்தாமல் பதவி ஏற்றது வியப்புக்குரியது.  மரணம் என்பது மீள வழி இல்லாத பாதை என்ற போதும் , தான் ஏற்கப்போகும் பொறுப்பின் தன்மை உணர்ந்து சொந்த சோகத்தினை வெளிப்படுத்தாதது போற்றுதலுக்குரியது.

ஆனால் செல்வி.ஜெயலலிதா விஷயத்தில் ஏற்பட்டிருப்பது ஒரு தேக்கமே.  மீள முடியாத சோகம் அல்ல. ஆனாலும் அழுகையின் அளவை பொறுத்து அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை தெரிகிறது.

தாங்கள் ஏற்கப்போவது ஒரு மாநிலத்தின் ஆட்சி பொறுப்பு. விருப்பு , வெறுப்பு ஏதுமின்றி தங்கள் கடமையை செய்வோம் என கூறும்போதே உள்ளம் வெதும்பி, கண்கள் கலங்கி , தாம் ஏற்கும் பொறுப்பிற்கும் , நமது அரசியல் சாசனத்திற்கும் ஒரு விரும்பதகாத களங்கத்தை மாண்புமிகுக்கள் ஏற்படுத்தி விட்டார்கள்.

இவற்றை அருகிலிருந்து கண்டும், சிறிதும் சிரிக்காமல் , கடமையே கண்ணாக இருந்த ஆளுநர் அலுவலக அதிகாரிகள் மற்றும்  தமிழக அரசின் அதிகாரிகளே உண்மையான கர்ம வீரர்கள். 

Saturday, April 5, 2014

உஸ்... அப்பா என்ன வெய்யில் ....

கத்திரி வெய்யில் துவங்குவதற்கு முன்பே வெப்பம் இப்படி சுட்டெரிக்கிறதே என அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றோம்.

வெளியில் அளவாக தலைகாட்டும் நமக்கே இப்படி என்றால், சுட்டெரிக்கும் வெய்யிலில் சூறாவளி பிரசாரம் செய்து வரும் நமது தலைவர்கள் இதனால் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என சற்று பார்ப்போமா ?

சொன்னதும் ( சொல்லப்போவதும் )

முதல்வர் , மற்றும் வைகை செல்வன் உட்பட கழக பேச்சாளர்கள் :

தமிழ்நாட்டில் மின்வெட்டா ? எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் .( நான் வந்த Helicopter fan கூட நன்றாக சுற்றியது . Current இல்லாவிட்டால் இவ்வாறு சுற்றுமா ?)


கலைஞர் :

Congress மதவாத பாதையில் இருந்து திரும்பினால் ஆதரவு அளிப்போம் . ( மன்மோகன் சிங் தாடி வளர்த்து,  டர்பன் அணிந்து தன்னை ஒரு சீக்கிய மதவாதியாக காண்பித்து கொண்டதால் congress உடன் கூட்டணி இல்லை )


விஜயகாந்த் :

விருதுநகர், விஜயகாந்த் , வைகோ, வெற்றி, வாழ்த்து - 5 V க்கள் ( நான் சொன்ன  5 "V" இவைதான் - வெட்டிபேச்சு , வீண் விவாதம் , வெறுப்பு, வயிற்று எரிச்சல் , விட்டால் போதும் )

பொன். இராதாகிருஷ்ணன் :

கூட்டணிக்குள் சிறு சல சலப்பு ஏற்படுவது இயற்கை தான் ( நான் சொன்ன கூட்டணி நான், இல.கணேசன், தமிழிசை , வானதி ஸ்ரீனிவாசன் )

Top and Super most : சிரிக்காமல் படிக்கவும் 

ஞான தேசிகன் மற்றும் நாராயணசாமி :

Congress அனைத்து  தொகுதிகளிலும்  வெற்றி பெறும்  ( நாங்கள் சொன்ன வெற்றி வேட்பாளர்களை தேடி கண்டுபிடித்து நிறுத்துவோம் என்பதுதான் - ஞான தேசிகன் , சொன்னபடி 15 நாட்களுக்குள் நிறுத்தி விட்டோம் - நாராயணசாமி )

வணக்கங்களுடன்
K.T.S.Mugundan

Saturday, January 5, 2013

கலைஞரின் கனிவான கவனத்திற்கு

அய்யா ஐந்தமிழ் அறிஞரே,

தங்களின் சமீப கால அறிக்கைகள், தங்களின் தலைமகனின் பேட்டி முதலியவற்றினால் இந்த சிறு மடல்.

இந்து மதத்தின் பெரும் பிரிவுகளான  சைவம் மற்றும் வைணவம் பல்வேறு மடங்களைக் கொண்டிருக்கின்றது.

வைணவ மடங்களின் தலைமை பொறுப்பிற்கு வர சில தகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன .

1. கிருஹஸ்தாச்ரமம்  எனப்படும் திருமண வாழ்க்கையை மேற்கொண்டிருக்கவேண்டும்

2.குறிப்பிட்ட மடத்தின் சீடராகவும், சம்பிரதாயங்கள் முழுதும் அறிந்திருந்து கடை பிடிப்பவராகவும் இருக்க வேண்டும்.

3.தற்போதய மடாதிபதிக்கு ரத்த சம்பந்தம் உள்ளவராக இருக்க கூடாது.

சைவ மடங்களில் மேற்கூறியவற்றில் திருமண வாழ்க்கையை தவிர்த்தவராக இருக்க வேண்டும். மற்ற நிபந்தனைகள் பொதுவானவை.

ஆனால் 

ஜனநாயக இயக்கமான தங்கள் இயக்கத்தின் அடுத்த தலைவரை ,தங்களின் ரத்த சம்பந்தமானவரை , தற்போதய தலைவரான தாங்கள்  தன்னிச்சையாக  அடையாளம் காட்டியது ஏன்?
 

எந்த தகுதியும் , அர்ப்பணிப்பும் இல்லாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் தங்களின் விருப்பம் ஒன்றின் பேரில் அரசு அமைப்பினில் உள்ளனர். 

எமது மடங்களால் ஒரு நெறியோடு பின்பற்றப்படும் வழிமுறையை, தங்களின் சுய லாபத்திற்காக  பின்பற்றி உள்ளது ஏன்?.

எமது மடங்கள் எவையும் ரத்த சம்பந்தம் உள்ளவரை அடுத்த தலைவர் ஆக்குவதில்லை. 

ஓரிரு தவறுகள் மடாதிபதிகளால்  செய்யப்படும்போது சமுதாயம் அதை தட்டி கேட்டு திருத்துகிறது ( மதுரை ஆதீன விவகாரம்)

தங்களின் கட்சி விஷயங்களின் எந்த மடமும் தலையிடுவதில்லை.

தாங்களும் தங்களின் வாரிசுகளும் தயை கூர்ந்து தங்களின் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இத்தகைய மடங்களை மேற்கோள் காட்டாதீர்.

தங்களின் செய்தியை புறக்கணிக்கும் செய்திதாள்களுக்கு பூணல் மாட்டி அழகு பார்க்கிறீர்கள்.

அதுபோல  பெரும்பான்மையான மக்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, ஆயுத பூஜை போன்றவை தங்களின் தொல்லைகாட்சியால் விடுமுறை திருநாள் என புறக்கணிக்கப்படும்போது, தங்களுக்கு என்ன பட்டம் கொடுத்து அழகு பார்ப்பது ?

பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.

நான் பொதுவானவன் அல்ல, ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழாக்கள், வழிமுறைகள் எனக்கு ஏற்புடையவை அல்ல என தாங்கள் நினைத்தால் அதை பகிரங்கமாக வெளியிட துணிவு வேண்டும்.

தங்களால் முட்டாள்தனம், என கருதப்படும் விஷயங்களை பின்பற்றும் முட்டாள் சமூகத்தின் வாக்குகளை வேண்டாம் என ஒதுக்கும் துணிவு வேண்டும்.

ஊருக்கு நாத்திகம் போதிக்கும் நீங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், வைத்திய வீரராகவரையும், மயிலை ஆதிகேசவரையும், சக்கரதாழ்வாரையும் நாடும் போது வாய் மூடி மௌனமாய் இருப்பது ஏன்?

பதில்கள் தங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும்.

தங்களின் ஆற்றலை ஆக்கத்திற்கு பயன்படுத்துங்கள், அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்த அல்ல.

வேண்டுகோளுடன்
முகுந்தன் 













Sunday, November 11, 2012

பூனை கட்டப்பட்டிருக்கிறது

ஒரு ஜென் கதை:

ஒரு ஜென் துறவி நாள்தோறும் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து வந்தார் . அப்பொழுது ஒரு பூனை குறுக்கும் , நெடுக்குமாக சென்று வந்து கொண்டிருந்தது. இதனால் அவரது  சீடர்களின் கவனம் சிதறியது. உடனே துறவி அந்த பூனையை உபதேசம் முடியும் வரை ஒரு தூணில் கயிறினால் கட்டி வைக்க சொன்னார்.
அது முதல் துறவி உபதேசம் தொடங்கும் முன் சீடர்கள் அந்த பூனையை கட்டி வைக்க தொடங்கினர். உபதேசமும் எந்த ஒரு தடங்கலும் இன்றி நடந்தது.

நாளடைவில் துறவி முக்தி அடைந்தார். அவருக்குப்பின் வேறு ஒரு துறவி உபதேசம் செய்து வந்தார். சிறிது நாளில் அந்த பூனை இறந்தது.

உடன் துறவி தன சீடர்களிடம் , நாளை உபதேசம் தொடங்கும்முன் ஒரு பூனையை தேடி கண்டுபிடித்து கட்டி வைக்கவும். ஏனெனில் உபதேசம் செய்யும் பொழுது ஒரு பூனையை தூணில் கையிற்றால் கட்டி வைப்பது நமது மடத்தின் கோட்பாடு என்றார்.

நாமும் சில பழக்க வழக்கங்களை , காரண காரியம் ஆராயாமல் வழி வழியாக வந்தவை என பின் பற்றி வருகிறோம். 

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டபோது, நீதித்துறை முழுக்க முழுக்க அவர்களிடத்தில் இருந்தது. அவர்களது முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவின் போதும், மிகுந்த வெப்பம் காரணமாக ஏப்ரல் - மே மாதங்களின் போதும் , அவர்கள் நீதி துறை சார்ந்த அலுவல்களுக்கு விடுமுறை அளித்து தமது நாட்டிற்கு சென்று  வந்தனர்

தற்போது நமது நாட்டில் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அனைவரும் அறிந்ததே. இருந்தும் மேற்கூறிய விடுமுறை என்னும் பூனையை நமது சுதந்திரத்திற்கு பிந்தைய அரசுகள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.

இதனால் நாட்டையே உலுக்கும் வழக்குகள் , விரைவாக முடிக்கப்படாமல் ,இழுத்தடிக்கப்படுகின்றன.   தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். அத்துடன், தண்டனை என்பது நிச்சயமில்லை எனும் போது , தவறுகளின் எண்ணிக்கையும் கூடும்.

நாட்டின் நலன் கருதி, தற்போதுள்ள அரசியல் கட்சிகளோ,ஊடகங்களோ,தன்னார்வ அமைப்புகளோ, இந்த பூனையை  கழற்றி விட முயற்சிக்குமா?

அன்பன்
K.T.S.Mugundan
9884087424