Saturday, November 29, 2014

இனியாவது தப்பிக்குமா எங்கள் மடங்கள் ?



திராவிடர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகங்களின் உணவுகளுக்கு அவ்வபோது ஊறுகாயாக பயன்படுவது " சங்கர மடம்  ஆகும் ". தங்களின் உட்கட்சியில் எப்போதெல்லாம் குழப்பம் ஏற்படுகின்றதோ , அப்போதெல்லாம் தங்களின் பலவீனத்தை மறைக்க சங்கர மடத்தை வம்புக்கிழுப்பது வாடிக்கையாகும்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் " வாரிசுகளை நியமிக்க எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடம் அல்ல " என்னும் பொன்மொழி அடிக்கடி இடம் பெரும். சங்கர மடத்திலோ , வேறு எந்த ஹிந்து மடங்களிலோ , தமது சொந்த வாரிசை அடுத்த பீடாதிபதியாய்  நியமிக்கும் வழக்கம் இல்லை.  இருப்பினும் அவற்றை மேற்கோள் காட்டி தமது பகுத்தறிவை அடிக்கடி பறை சாற்றி கொள்வது கழகங்களின் வாடிக்கை.

சமீபத்தில் டெல்லி இமாம் , தமது மகனை அடுத்த வாரிசாக நியமித்து உள்ளார். இது எந்த கழகத்தின் கண்களையும் உறுத்தவில்லை. கேள்வி கேட்கப்படாவிட்டாலும் , கேள்வியும், பதிலும் தாமே எழுதும் கலைஞரும், ஹிந்து மதத்தின் சிறு அசைவுகளுக்கும் , வேப்பேரியில் மேடை போட்டு வீர வசனம் பேசும் வீரமணியாரும், மெய் சுருக்கி, வாய் மூடி , மௌன சாமியார்களாக மாறி விட்டனர்.

" சிறுபான்மை ஆதரவு " என்பது " பெரும்பான்மையினரை சிறுமைப்படுத்துவதே" என்ற உ(ள )யரிய நோக்கத்துடன் , சிறுபான்மையினரை விமர்சித்தல் மதச்சார்பின்மைக்கு விரோதம் என்ற விந்தை தத்துவமும் சேர்ந்து , கழக பேனாக்களையும், பிரசார பீரங்கிகளையும் கட்டி போட்டிருக்கிறது.

இனியாவது இவர்கள் எமது சங்கர மடங்களை மன்னித்து மேற்கோள் காட்டாமல் ,கருணை காட்டுவார்களா ?

அன்பன்

K.T.S.Mugundan

No comments:

Post a Comment